ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்க வேண்டும்

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைந்ததால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-22 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனிடையே கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

தடை நீடிப்பு

இதனால் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நடைபாதை, மெயின் அருவியில் உள்ள இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே வார விடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரி கரையோரம் ஆங்காங்கே குளித்து சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் போலீசார் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை பூட்டி வைத்தனர். மேலும் போலீசார் காவிரி கரையோரம் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பரிசல் ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்