ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலைக்கு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வரவேற்றனர்.

Update: 2019-09-23 23:15 GMT
கும்பகோணம்,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சுமார் 700 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையான் சமேத அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு திருட்டு போனது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு கடந்த 1984-ம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் இருந்து திருட்டு போன பல்வேறு பழமையான சிலைகளை மீட்டு வருகின்றனர்.

நடராஜர் சிலை மீட்பு

இந்த சிறப்பு விசாரணை குழுவினர் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மாயமான சிலைகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தொல்லியல்துறை உதவியுடன் அந்த நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சியில் இருந்து மாயமான சிலை என்பதை ஆஸ்திரேலிய அரசிடம் நிரூபிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அரசும், அருங்காட்சியகத்தினரும் கடந்த 11-ந் தேதி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு குழுவிடம் நடராஜர் சிலையை ஒப்படைத்தனர்.

கோர்ட்டில் ஒப்படைப்பு

இதனை தொடர்ந்து ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த நடராஜர் சிலை நேற்று சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், மலைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை கொண்டு வந்தனர்.

மலர் தூவி வரவேற்பு

அப்போது கோர்ட்டு வளாகத்தில் விஸ்வஇந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி மற்றும் சிவனடியார்கள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க நடராஜர் சிலைக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் நீதிபதி முன்னிலையில் நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் சிலையின் எடை, உயரம், அகலம் ஆகியவற்றை அளவீடு செய்தனர்.

சுழற்சி முறையில் பாதுகாப்பு

இதற்கிடையில் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையான் கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், குருக்கள் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மீட்கப்பட்ட சிலையை கல்லிடைக்குறிச்சி கோவிலில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அங்கு சிலைக்கு போலீசார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நடராஜர் சிலையை கும்பகோணத்தில் இருந்து கல்லிடைக்குறிச்சிக்கு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறியதாவது:-

கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை 30 கிலோ 300 கிராம் எடையும், 75 செ.மீட்டர் உயரமும், 47 செ.மீட்டர் அகலமும் உடையது. இந்த சிலையை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே நாங்கள் சிலையை கோவில் நிர்வாகத்திடம் நாளை(அதாவது இன்று) ஒப்படைக்க உள்ளோம். சிலையை பாதுகாக்க கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்