தனியார் மயமாக்குவதை கண்டித்து விமானநிலைய ஊழியர்கள் 3 நாட்கள் உண்ணாவிரதம்

தனியார் மயமாக்குவதை கண்டித்து விமானநிலைய ஊழியர்கள் 3 நாட்கள் உண்ணாவிரதம்.

Update: 2019-09-25 22:45 GMT
செம்பட்டு,

இந்தியாவில் உள்ள ஆமதாபாத், மங்களூர், திருவனந்தபுரம், லக்னோ, கவுகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் மயம் ஆக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 2-வது பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி, திருச்சி விமான நிலையமும் தனியார் மயம் ஆக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையங்களில் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக கருப்பு பேட்ஜ் அணிந்து விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஒரு வாரமாக உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மூன்றாவது கட்டமாக நேற்று முதல் 3 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இதில் பெண் ஊழியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்