திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5,643-க்கு விலை போனது

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5,643-க்கு விலை போனது.

Update: 2019-09-26 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடைபெற்று பஞ்சுகள் அறுவடை செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளன. திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய 3 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் ஏலத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில பருத்தி ஏலம் நடந்தது. இதில் திருவாரூரை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் 581 லாட்டுகள் பருத்தி ஏலத்துக்கு வைக்கப்பட்டிருந்தன. வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியின் தரத்திற்கு ஏற்ப தொகையை சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்்.

அதிகபட்சமாக ரூ.5,643-க்கு விலை

இதனை தொடர்ந்து வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) கிருஷ்ணமூர்த்தி, விற்பனைக்குழு செயலாளர் சேரலாதன், கண்காணிப்பாளர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 643-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரத்து 209-க்கும், சராசரியாக ரூ.4 ஆயிரத்து 346-க்கும் விலை போனது. ஏலத்தில் 796 குவிண்டால் பருத்தி விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.34 லட்சத்து 60 ஆயிரத்து 141 ஆகும்.

மேலும் செய்திகள்