கள்ளக்குறிச்சி அருகே, குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கள்ளக்குறிச்சி அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-09-27 22:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் முகுந்தன் (வயது 9). சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவனது பாட்டி லட்சுமி அதே ஊரில் உள்ள ஏரி வாய்க்காலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் தனது பாட்டியை பார்ப்பதற்காக முகுந்தன் சைக்கிளில் வாய்க்காலுக்கு புறப்பட்டு சென்றான். அப்போது செல்லும் வழியில் உள்ள குட்டையில் கால் கழுவதற்காக அவன் இறங்கினான்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவன் குட்டையில் தவறி விழுந்தான். இதில் நீச்சல் தெரியாததால் முகுந்தன் நீரில் மூழ்கினான். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, குட்டையில் இறங்கி அவனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், முகுந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவனது உறவினர்கள் முகுந்தனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்