சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது - தீக்காயம் அடைந்த புதுப்பெண் உள்பட 2 பேர் சாவு

சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயம் அடைந்த புதுப்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-09-27 22:00 GMT
நத்தம்,

நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் மெய்யன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் கடந்த 20-ந் தேதி சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பற்றியது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீக்காயம் அடைந்த மெய்யனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை அருகே மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சிதா (22). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி ரஞ்சிதா சமையல் செய்ய ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரஞ்சிதாவின் சேலையில் தீப்பிடித்தது.

இதனால் அவருடைய உடலில் தீ பரவியதால் அலறி துடித்தார். தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரஞ்சிதாவுக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் மதுரை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்