தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவ பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

Update: 2019-09-28 22:45 GMT
தூத்துக்குடி, 

மத்திய அரசு நிதி உதவியுடன், நீலப்புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் முக்கிய இடங்களில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்கு மீனவ பெண்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கணவனை இழந்த மீனவ பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எனவே தகுதியுள்ள மீனவ பெண்கள் உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் கலெக்டர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றிய தகுதியான நபர் மற்றும் அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் 2020-ம் ஆண்டுக்கான சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஷ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தகுதியான தனிநபர் மற்றும் அமைப்புகள், http://dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்