திருக்கோடீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன், பெருமாளாக காட்சி தரும் உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்

திருக்கோடீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன், பெருமாளாக காட்சி தரும் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-09-29 22:30 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருக்கோடிக்காவல் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்மன் சமேத திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆழ்வார்களுக்கு அம்மன் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.

இதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமை நாளில் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மன் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளாக காட்சி தரும் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி கோவிலில் உற்சவம் நடந்தது.

பெருமாளாக அம்மன்...

அப்போது திரிபுரசுந்தரி அம்மனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை போல அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி சரண்யா மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். இதையடுத்து கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. விஜயதசமியன்று அம்புவிடும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் செய்திகள்