ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் உண்ணாவிரதம்

ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-01 23:00 GMT
சோமரசம்பேட்டை,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 53-வது வார்டு பகுதியான உய்யகொண்டான் திருமலையை அடுத்துள்ள ரெட்டை வாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர், கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரெட்டைவாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கடையின் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் நேற்று காலை 6 மணியளவில் விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கடையின் முன்பாக கருப்பு கொடிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர், மக்கள் கலை இலக்கிய கழகம், சமூக நீதிப்பேரவை, குடியிருப்பு சங்கத்தினர், வணிகர்களின் பேரமைப்பு, வியாபாரிகள் நலச்சங்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

அவர்களிடம் டாஸ்மாக் உதவி மேலாளர்(கிடங்கு) சக்தீஸ்வரி, டாஸ்மாக் தாசில்தார் ஆனந்த், ஸ்ரீரங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரெட்டைவாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான கருத்துரு எதுவும் இல்லை என்று உறுதி அளித்ததன்பேரில் மதியம் 12 மணி அளவில் உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்