பழனி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - ரூ.9 லட்சம் தரம்பிரிக்கும் எந்திரம் எரிந்து நாசம்

பழனி நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான தரம் பிரிக்கும் எந்திரம் எரிந்து நாசமானது.

Update: 2019-10-08 22:15 GMT
பழனி, 

பழனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சேகரமாகும் குப்பைகள் பழனி பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து தரம்பிரிக்க குப்பைக்கிடங்கில் பேக்கிங் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து பழனி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் குப்பைக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் எந்திரம் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்