செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.10 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-10-09 22:30 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் தனலட்சுமி நகர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கருணாகரன் தலைமையிலான வருவாய் புலனாய்வுத்துறையினர் மற்றும் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர்பீட்டர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர்.

அதில், குடோனில் சுமார் 10 டன் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒருவருக்கு சொந்தமான செம்மரக்கட்டைகளை கடத்திவந்து குடோனில் பதுக்கி வைத்து உள்ளதும், இங்கிருந்து கன்டெய்னர் மூலமாக சென்னை துறைமுகம் கொண்டுசென்று அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்திச்செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த குடோன் யாருடையது?, அங்கு செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்