பதவி உயர்வு வழங்கக்கோரி தஞ்சையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு வழங்கக்கோரி தஞ்சையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வருகிற 24-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Update: 2019-10-09 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் செந்தில், மாநில செயலாளர் ரவிசங்கர், மாநில பொருளாளர் ராமு, முன்னாள் மாநில தலைவர் கனகசபாபதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து அரசு டாக்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

ேபட்டி

பின்னர் மாநில தலைவர் செந்தில், மாநில செயலாளர் ரவிசங்கர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். பல்வேறு கட்டங்களாக தமிழகஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அரசும் எங்களது கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக சொல்கிறது. காலதாமதமின்றி எங்கள் கோரிக்கைகளை இந்த மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நோயாளிகள் சேவையை தவிர மற்ற அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய நாட்களில் பயிற்சி வகுப்பு, ஆய்வு கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க மாட்டோம்.

19 ஆயிரம் டாக்டர்கள்

30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். அன்றை நாட்களில் அவசர சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ள டாக்டர்கள் குழுவினர் பணியில் இருப்பார்கள். மற்ற சிகிச்சைகள் எதுவும் செய்யமாட்டோம். நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 29-ந் தேதி கூடுதல் பணிகளை செய்து அறுவை சிகிச்சைகளை எல்லாம் செய்து முடிக்க உள்ளோம்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நியாயமான எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் போராட்டத்தை தவிர்க்கலாம். இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் 19 ஆயிரம் அரசு டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். புதுச்சேரி, பீகார், அரியானா போன்ற மாநிலங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.

சட்டப்படி

மத்தியஅரசு டாக்டர்கள் நோயாளிகள் சேவையை மட்டும் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் நோயாளிகள் சேவை மட்டுமின்றி கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறோம். எங்களுக்கு வேலைபளு அதிகம். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்