பல்லாவரம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி வாலிபர் படுகாயம்

பல்லாவரம் அருகே பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய கார், இருசக்கர வாகனத்தில் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-10-09 21:45 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குன்றத்தூர், நீலாம்பாள் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 24). இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார்.

பல்லாவரம் அடுத்த முத்தமிழ்நகர் சந்திப்பு அருகே பம்மல் பிரதான சாலையில் வந்தபோது, அனகாபுத்தூரை சேர்ந்த கார் டிரைவர் பாஸ்கர் (19) என்பவர் ஓட்டிவந்த சொகுசு கார், திடீரென தறிகெட்டு ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது தொடர்ந்து மோதி, இறுதியில் பாலமுருகன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலமுருகன், படுகாயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் டிரைவர் பாஸ்கருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்