மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகள் சாதனை

மாநில அளவிலான தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2019-10-10 22:45 GMT
பெரம்பலூர்,

மாநில அளவிலான இளையோருக்கான தடகள போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீராங்கனைகள் 4 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும், 1 வெண்கலப்பதக்கமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இதில் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவிற்கான 3 கிலோ மீட்டர் நடை போட்டியில் சுபா‌ஷினி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், 18 வயதிற்கு உட்பட்ட 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருத்திகா தங்கப்பதக்கமும், பிரியதர்‌ஷினி ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், கார்குழனி சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். 18 வயதிற்கு உட்பட்ட 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரோக்கிய எபேசியா வெள்ளிப்பதக்கமும், 20 வயதிற்குட்பட்ட 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் பவானி வெள்ளிப் பதக்கமும், 18 வயதிற்கு உட்பட்ட ஹெப் பாத்லன் போட்டியில் சங்கீதா வெண்கல பதக்கமும் பெற்றனர்.

பாராட்டு

போட்டியில் தங்க, வெள்ளி பதக்கங்களை பெற்ற வீராங்கனைகள் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த வீராங்கனைகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, மாணவிகள் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயகுமாரி, தடகள பயிற்சியாளர் கோகிலா, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்