மூங்கில்துறைப்பட்டு அருகே, வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பள்ளி மாணவன் திடீர் சாவு - போலீசார் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு அருகே திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-10-10 22:45 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சீர்பாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஆகாஷ்குமார் (வயது 16). இவன் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை ஆகாஷ்குமார் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான்.

இந்த நிலையில் மதியம் வாந்தி எடுத்த அவன் திடீரென மயங்கி விழுந்தான். இதை பார்த்த ஆசிரியர்கள், உடனே இதுபற்றி அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெற்றோர் வந்து ஆகாஷ்குமாரை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே வீட்டில் வைத்தும் அவனுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ்குமாரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஆகாஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து பழனி மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாந்தி-மயக்கம் ஏற்பட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்