காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போக்குவரத்து நெரிசல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் போலீசாருக்கு கிரண்பெடி உத்தரவு

புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விவரங்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

Update: 2019-10-10 23:52 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது சமாளிக்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அண்ணா சாலை, கடலூர் ரோடு, நெல்லித்தோப்பு சிக்னல், மரப்பாலம் சிக்னல் என முக்கிய சந்திப்புகளில் போலீசார் பணியில் இருந்தபோதிலும் இதை சமாளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் போக்குவரத்து சிக்னல்களில் போலீசார் பணியில் இருப்பதில்லை என கவர்னர் கிரண்பெடிக்கு புகார் வந்தது.

தேங்காய் திட்டு சந்திப்பில் காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து போலீசார் இல்லை. சிக்னலும் இயங்கவில்லை என்று கவர்னர் கிரண்பெடிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி ஒரு உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக அவர் வாட்ஸ் அப்பில் தெரிவித்த தகவல் வருமாறு:-

அனைத்து போக்குவரத்து ஆய்வாளர்களும் போக்குவரத்து நிலைமைகளை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் உள்ள களநிலவரத்தையும் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல் செயல்படும் போதும் ஏன் நெரிசல் ஏற்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். பொதுமக்களும் உடன் புகார்களை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நிலையை தெரிவிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்