பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
பென்னாகரம் அருகே உள்ள எர்ரகொல்லனூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முதுக்கம்பட்டி-ஏரிக்ெகால்லனூர் சாலையில் எர்ரகொல்லனூரில் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகள் மற்றும் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.