வறட்சி நிவாரண நிதியில் முறைகேடு: கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

ஒரத்தநாடு அருகே வறட்சி நிவாரண நிதியில் முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-10-12 23:15 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வெட்டுவாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் பாக்கியராஜ்(வயது 41). இவர், கடந்த 2016-17-ம் ஆண்டில் நெய்வேலி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரண நிதி வழங்கியது. இதற்குரிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் பாக்கியராஜ் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர். இதில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து நெய்வேலி தென்பாதியை சேர்ந்த சசிக்குமார், தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினார். மேலும் இது குறித்து கோர்ட்டிலும் சசிக்குமார் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

பணியிடை நீக்கம்

இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேசுக்கு உத்தரவிட்டார். வருவாய் கோட்டாட்சியர் மேற்கொண்ட விசாரணையில் 2016-2017-ம் ஆண்டில் நெய்வேலி பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரண நிதியில் முறை கேடு நடந்துள்ளது தெரிய வந்தது.

குறிப்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ், தனது வங்கி கணக்கு எண்ணை ஆவணத்தில் பதிவு செய்து இதன் மூலம் ரூ.25 ஆயிரத்து 600-ஐ முறைகேடாக பெற்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்