மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அணையில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-12 22:45 GMT
மஞ்சூர், 

மஞ்சூர் அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாயி. இவருடைய மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் முருகனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் பிரிந்தனர்.

இதனால் முருகன் தாயுடன் இத்தலார் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே முருகன் மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் முருகனை அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் இதுகுறித்து எமரால்டு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், மாயமான முருகனை தேடி வந்தனர். இந்தநிலையி்ல மஞ்சூர் அருகே உள்ள போர்த்தி அணையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக எமரால்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, அணையில் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.

அப்போது அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல்போன இத்தலார் பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்