புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2019-10-12 22:30 GMT
நாகர்கோவில்,

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதமாகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்தால் துன்பங்கள் விலகி, நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். அதனால் புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

இதே போல் இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பிறந்தது. பின்னர் அந்த மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் பெருமளவில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

கடைசி சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்கள் அனைத்திலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனால் பக்தர்களின் கூட்டம் கோவில்களில் அலைமோதியது. நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதேபோல் கோட்டார் வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் மாலை, கிளி பரிவட்டம் ஆகியவை வெங்கடாசலபதிக்கு அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பெருமாள் கோவில்கள்

இதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன், சுசீந்திரன் துவாரகை கிருஷ்ணன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

மேலும் செய்திகள்