கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்த பொதுமக்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-10-14 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள் உள்பட 241 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது ஒருமாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் காளிமுத்தன் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிவகங்கையை அடுத்த காயாங்குளம் ஆதிதிராவிடர் காலனி பகுதி மக்கள் காலி குடங்களுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- காயாங்குளம் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதி அடைகிறோம். எனவே உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

முன்னதாக மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்திருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் அவர்களை பார்த்ததும் காரை விட்டு இறங்கி அவர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்