தொழிலாளி கொலையில் மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை
தொழிலாளி கொலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அன்னலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). ஓய்வுபெற்ற துறைமுக ஊழியர். இவருடைய மகன் விமல்ராஜ் (35). கூலி தொழிலாளி. இவருக்கு சுடலைக்கனி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் வேலை செய்து வந்ததால் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் உள்ள வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் இறந்து விட்டார். இதனால் குறுக்குச்சாலையில் விமல்ராஜின் தாய் வீரலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீரலட்சுமி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர், விமல்ராஜை இறக்கி விட்டு சென்றனர். சிறிது நேரத்தில் விமல்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகலிங்கம் (48) தரப்பினர் விமல்ராஜை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், நாகலிங்கம் உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சக்திவேல், கிருஷ்ணா, மகாராஜன் ஆகிய மேலும் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர சிலரை தேடி வருகின்றனர்.