வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை: தஞ்சையில், முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது

தஞ்சை புறவழிச்சாலை பகுதியில் வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டி வந்த முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-10-17 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து பள்ளி யக்ரஹாரம் செல்லும் பைபாஸ் சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து பொதுமக்களை கொடூரமான ஆயுதங்களால் முகமூடி கொள்ளையர்கள் தாக்கி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தனர்.

இது தொடர்பாக வல்லம் போலீசாருக்கு தகவல் வந்தது. ஆனால் கொள்ளையர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும் சம்பவம் நடைபெறும் பகுதி காடாக இருந்தது கொள்ளையர்களுக்கு மேலும் வசதியாக இருந்தது.

தனிப்படை அமைப்பு

இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின்பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் வழிகாட்டுதலின் பேரில் வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டுகள் சாமிநாதன், இளவரசன், உமாசங்கர், ரமே‌‌ஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.இந்த தனிப்படையினர் முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே வந்த முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் தஞ்சை மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகரை சேர்ந்த முத்துசாமி மகன் ரமே‌‌ஷ்(வயது28) என்பவனை போலீசார் கைது செய்தனர்.

10 பவுன் நகைகள் பறிமுதல்

அவன் கொள்ளையடித்த நகையை மனைவியிடம் கொடுத்து வைத்துள்ளான். சிறிது நகைகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளான். அதன் பேரில் 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அவனை பிடித்து விசாரணை நடத்தியதில் வல்லம் போலீஸ் நிலையத்தில் வீடு மற்றும் கடைகளிலும் இரவு நேரங்களில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது, பைபாஸ்சாலையில் இரவு நேரங்களில் வருபவர்களை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்தது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்