புதுப்பெண் தற்கொலை: கணவரும் தூக்கில் தொங்கினார்

புதுப்பெண் தற்கொலை சம்பவத்தில் அவரது கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-17 22:15 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பெரிய மேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவி. இவரது மகள் லோகேஸ்வரிக்கும் உறவுக்காரரான எளாவூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் அன்பு (வயது 27) என்பவருக்கும் திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது.

புதுப்பெண் லோகேஸ்வரி தனது கணவர் அன்புவுடன் எளாவூரில் வசித்து வந்தார். கடந்த 15-ந்தேதி நரசிங்கபுரம் பெரிய மேடு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் லோகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் லோகேஸ்வரியின் கணவரான அன்பு, வரதட்சணை கேட்டும், சந்தேகப்பட்டும் லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் பெண் வீட்டார் சார்பில் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது.

மேலும், சம்பவத்தன்று தனது தாய் வீட்டில் இருந்த லோகேஸ்வரியிடம் நேரில் வந்து அன்பு தகராறு செய்ததாகவும் அதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. மேலும் திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆர்்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் புது மாப்பிள்ளை அன்பு நேற்று ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய ஆந்திர மாநில தடா போலீசார் பிரேத பரிசோதனைக்காக சூளூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்