காரைக்குடி அருகே, வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது

காரைக்குடி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-10-17 22:45 GMT
காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 24). இவர் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர், தனது நண்பர் கழனிவாசலை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் உ.சிறுவயலிலிருந்து காரைக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பேயன்பட்டி அருகில் வந்த போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், நண்பர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளினர்.

அப்போது ரமேசும், ஜெயராமனும் கீழே விழுந்து விட, அவர்களை சுற்றி வளைத்து வெட்டினர். இதில் ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். ஜெயராமனை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த பின் அங்கிருந்து தப்பி விட்டது.

கடந்த ஆண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கவே இந்த கொலை சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த உ.சிறுவயலை சேர்ந்த கார்த்தி (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்குடியை சேர்ந்த அஜித், பேயன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்