மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத வாய் சொல் வீரர் நாராயணசாமி - கண்ணன் அறிக்கை

மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத வாய் சொல் வீரர் நாராயணசாமி என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-18 22:45 GMT
புதுச்சேரி,

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதியில் சட்டம்-ஒழுங்கு, வேலைவாய்ப்பை உருவாக்குதல், வியாபாரத்தை பெருக்குதல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் என பணிகளை மேற்கொண்டு அழகிய நகரமாக உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அதற்கு இங்கு போட்டியிடும் கட்சிகளில் எதை தேர்ந்தெடுத்தால் அது சாத்தியப்படும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறது. மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு தலை வணங்குகிறோம். ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மகாசக்தி.

மழை வந்தால் அதற்கு வடிகாலாக எந்த திட்டத்தை அவர்கள் வைத்து இருக்கிறார்கள்? முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் ஓட்டு வாங்குவது மட்டும் தான் சாதனை என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.

இப்போது 2 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் யாரை தேர்ந்தெடுத்தாலும் நம்முடைய தலைவிதி. ரங்கசாமி வீதிவீதியாக வருகிறார். யாரையும் எந்த விதத்திலும் சிந்தித்து பார்க்காத நாராயணசாமி தான் வளர்ந்த ஊருக்கு ஒரு காசு கூட ஒதுக்காதவர்.

ஊருக்கு எந்த வகையில் நம்மை செய்யாத வாய் சொல் வீரராக இருக்கும் நாராயணசாமியின் கட்சிக்கு ஓட்டு போடுவதால் யாருக்கு என்ன லாபம். ஏழை, எளிய மக்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். வியாபாரிகள் முடங்கி கிடக்கிறார்கள். யாருக்கும் எதையும் செய்யாத இந்த அரசு யாரையாவது குற்றம் சொல்லியே நாட்களை நகர்த்தி வருகிறார்கள்.

கமிஷன் பெற்றுக்கொண்டு மக்களுக்கு அரிசியை வழங்குவதை விட, அதை நேரடியாக பணமாக கொடுங்கள் என்று கவர்னர் சொல்கிறார். இதில் என்ன குற்றம் உள்ளது. புதுவையில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆட்டோ சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்