பழனி அருகே துணிகரம்: மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், பொருட்கள் திருட்டு

பழனி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2019-10-20 22:15 GMT
நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி காமராஜர் வீதி பகுதியை சேர்ந்தவர் அசன்முகமது (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, மளிகை பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பீடி, சிகரெட் பண்டல்கள், எண்ணெய் டின்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தனும் திருட்டு நடந்த கடைக்கு வந்து பார்வையிட்டார். திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ‘லிண்டா’ வரவழைக்கப்பட்டது.

அது திருட்டு நடந்த கடையில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் திருட்டு நடந்த கடையில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பாப்பம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்