புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-10-22 22:30 GMT
புதுச்சேரி,

வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகளுடன் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்.

மாகி, ஏனாம் போன்ற இடங்களில் வசித்து வருவோர் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட புதுச் சேரிக்கு வருவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால் மறுநாள் திங்கட் கிழமை அவர்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற நிலைமையில் தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்தது.

அதை பின்பற்றி புதுச்சேரியிலும் விடுமுறைவிட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை தலைமை செயலாளர் அஸ்வனி குமாரை தனது அலுவலகத்துக்கு அழைத்து பேசினார். அப்போது தீபாவளியையொட்டி விடுமுறை விடுவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக அதற்கு அடுத்த நாளிலும் விடுமுறை அளிக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று புதுச்சேரியில் வருகிற 28-ந்தேதி (தீபாவளிக்கு மறுநாள்) விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடு முறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்