டிராக்டர் மோதி விவசாயி பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

மொபட் மீது டிராக்டர் மோதி விவசாயி பலியான வழக்கில் டிராக்டர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2019-10-25 22:30 GMT
கீழ்பென்னாத்தூர், 

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கீக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 61), விவசாயி. கடந்த 2013-ம் ஆண்டு கீக்களூரில் இருந்து மேக்களூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீக்களூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி ஏழுமலை (49) என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார். கீக்களூர் காளியம்மன் கோவில் அருகே டிராக்டர் முன்னால் சென்ற மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டை ஓட்டிச் சென்ற மாயகிருஷ்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் நடந்து வந்தது. இந்த வழக்கை நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட்டு விசாரித்து ஏழுமலைக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்