அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தல்

அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-10-25 22:15 GMT
திருவாரூர்,

தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு இறைவனை வணங்குவதுடன், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வார்கள். பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறு குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனால் தமிழ் நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும், நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதற்காக, தமிழக அரசு இந்த வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வாதியாக இணைத்து கொண்டது.

இந்த வழக்கில் சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தது. மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங் களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்