மின்னல் தாக்கி பெண் பலி
செய்யாறு அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். மகள் படுகாயம் அடைந்தார்.
செய்யாறு,
செய்யாறு தாலுகா கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி ஜெயகாந்தி (வயது 55). இவரும், இவரது மகள் சங்கீதா என்ற தமிழ்ச்செல்வி(38) இருவரும் தன்னுடைய நிலத்தில் வேர்க்கடலை எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோவிலூர் கிராமத்திலும் மழை பெய்தது. இதனால் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயகாந்தி, சங்கீதா அருகில் உள்ள வேப்பமரத்தின் அடியில் மழைக்காக ஒதுங்கி இருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயகாந்தி பரிதாபமாக இறந்தார். மின்னல் தாக்கியவுடன் அங்கிருந்து பயந்து ஓடிய சங்கீதா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.