தீபாவளியையொட்டி, மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.6½ கோடிக்கு மது பானம் விற்பனை: கடந்த ஆண்டை விட ரூ.3¾ கோடி குறைவு

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.6½ கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடியே 74 லட்சம் குறைவாகும்.

Update: 2019-10-28 23:00 GMT
நாமக்கல்,

தமிழகம் முழுவதும் பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய வகை மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் மது பாட்டில்களும் இருப்பு வைக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 மதுபான கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண நாட்களில் ஏறத்தாழ ரூ.2 கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3½ கோடிக்கு மது விற்பனையானது. இதேபோல் 26-ந் தேதியும் ரூ.3 கோடிக்கு மது விற்பனையானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.6½ கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.10 கோடியே 24 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என 2 நாட்களில் ரூ.3 கோடியே 74 லட்சத்துக்கு மது குறைவாக விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்