பணகுடியில் கார் மோதி தொழிலாளி சாவு - டிரைவர் கைது

பணகுடியில் கார் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-28 23:00 GMT
பணகுடி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடைய மகன் முருகன் (வயது 30). இவர் காவல்கிணற்றில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று காலை முருகன் தனது மோட்டார்சைக்கிளில் மாவடியை சேர்ந்த செல்லத்துரை மகன் ஜெயராமன் (40) என்பவரை பின்னால் ஏற்றிக் கொண்டு பணகுடி வடக்கு பைபாஸ் ரோடு பிரிவில் வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், அவரது மோட்டார்சைக்கிளில் மோதியது.

இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயராமனுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கண் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த சே‌ஷான் சிங் (40) என்பவரை கைது செய்தார். காயம் அடைந்த ஜெயராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்