திருப்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-29 22:45 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ கழகம் டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்ககூடாது. அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக்கல்வியில் ஏற்கனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கண்ட கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு டாக்டர் கிருபானந்த் தலைமை தாங்கி பேசினார். டாக்டர் கார்த்திகேயன் வாழ்த்தி பேசினார். இந்த தர்ணா போராட்டத்தில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் 54 டாக்டர்களும் பங்கேற்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறியதாவது:– திருப்பூர் அரசு மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நடந்த தர்ணா போராட்டத்தின் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சற்று தாமதம் ஆனது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று வழக்கமான கூட்டம் இல்லை. மேலும், நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அவசர சிகிச்சை பெறுகிறவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும்.

 இதுபோல் திருப்பூர் மாநகர் பகுதிகளில் மொத்தம் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 38 என மொத்தம் 55 சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த போராட்டத்தின் காரணமாக சுகாதார நிலையங்களில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்தனர். பல்வேறு பாதிப்பிற்குள்ளாகினார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்