`தாயை அவதூறாக பேசாதே' என கூறிய அண்ணன் குத்திக்கொலை; தம்பி கைது

தாயை அவதூறாக பேசாதே என கூறிய அண்ணனை கத்தியால் குத்திக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-29 23:35 GMT
தானே, 

தானே மும்ரா பகுதியில் உள்ள மனிஷாநகரை சேர்ந்தவர் நித்தின் கோகலே(வயது40). இவர் மனைவி, பெற்றோர் மற்றும் தம்பி அஜய் (36) ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். சம்பவத்தன்று அஜய்க்கு தாய் உணவு பரிமாறிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் உணவு சரியில்லை என தாயிடம் தகராறு செய்து அவதூறாக பேசினார்.

அப்போது, வீட்டில் இருந்த நித்தின் கோகலே, தாயை அவதூறாக பேசாதே என அஜயை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அண்ணன் என்று கூட பார்க்காமல் நித்தின் கோகலேயை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்தின் கோகலேயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணனை கொலை செய்த தம்பி அஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்