கருமத்தம்பட்டி அருகே, கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமாகி ஓராண்டில் பரிதாப முடிவு

கருமத்தம்பட்டி அருகே திருமணமாகி ஓராண்டில், கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-30 23:00 GMT
கருமத்தம்பட்டி,

கோவை கருமத்தம்பட்டி அருகே கணியூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னான்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். அவரது மனைவி ரஞ்சனி. இவர்களுடன் மகன் கேசவராஜ் (வயது 22). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கீர்த்திகா (20). இவர்கள் 2 பேருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி வரை வீட்டில் கேசவராஜும், கீர்த்திகாவும் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கேசவராஜின் பெற்றோர், கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது கேசவராஜும், கீர்த்திகாவும் ஒரே கயிற்றினால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மேலும் அவர்கள் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கேசவராஜ், கீர்த்திகா ஆகியோரின் உடல் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறில் கேசவராஜும், கீர்த்திகாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான ஓராண்டில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்