பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவிக்கலாம் சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் பாதுகாப்பு இன்றி இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து புகார் தெரிவிக்கக் கோரி சென்னை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2019-10-31 22:00 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தற்போது வலுவடைந்துள்ளது. இதையொட்டி சென்னை மாவட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் வருவாய்த்துறை உள்பட இதர தொடர்பு துறைகளோடு இணைந்து சேதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் நேரங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை 24 நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படும்.

பழைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தாலோ, மின்கம்பி அறுந்து விழுந்திருந்தாலோ, மழைநீர் தேங்கியிருந்தாலோ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மாநகராட்சிக்கு 1913, கலெக்டர் அலுவலகத்துக்கு 1077, மின்சாரவாரியத்துக்கு 1912, காவல்துறைக்கு 100, தீயணைப்பு துறைக்கு 101, 102 என்ற கட்டணம் இல்லாத உதவி எண்களிலும், குடிநீர் வாரியத்தை 044-45674567 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பு இன்றி  பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் நிலையில் இருந்தால், அதுதொடர்பான புகார்களை 1077, 044-25243454 என்ற எண்களில் தொடர்புகொண்டும், 9384056232 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் புகைப்படத்தோடும் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்