தாவணகெரேயில் நடந்த சோகம்: ஊஞ்சல் ஆடிய போது கயிறு கழுத்தை இறுக்கியதில் - 11 வயது சிறுமி சாவு

தாவணகெரேயில் ஊஞ்சல் ஆடிய 11 வயது சிறுமி ஊஞ்சல் கயிறு இறுக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-10-31 23:00 GMT
தாவணகெரே,

தாவணகெரே மாவட்டம் ஆசாத் நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மனைவி சாந்தம்மா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளின் பெயர், சஞ்சனா (வயது 11). இவள் தாவணகெரே மாவட்டம் ஜாகலூர் தாலுகா தேவிக்கெரேயில் உள்ள மொராஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சஞ்சனா தனது வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஊஞ்சல் ஆடுவதை பழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று சஞ்சனாவின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த சஞ்சனா ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு அவளது கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் அவள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தாள். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த சஞ்சனாவின் பெற்றோர் தங்களது மகள் ஊஞ்சல் கயிறு இறுக்கி இறந்துபோனதை பார்த்து கதறி அழுதனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஆசாத் நகர் போலீசார் விரைந்து வந்து சிறுமி சஞ்சனாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஊஞ்சல் ஆடிய போது ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்