பெரியபாளையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி நாற்றுநடும் போராட்டம்

பெரியபாளையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி நாற்றுநடும் போராட்டம் நடந்தது.

Update: 2019-10-31 23:00 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், நெய்வேலி ஊராட்சியில் உள்ள மேட்டுத்தெரு ஒன்றிய சாலை, அதே ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு தெருக்களில் உள்ள சாலைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படவில்லை.

அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் அதில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற்படுகிறது.

நாற்றுநடும் போராட்டம்

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு பொதுமக்களின் சார்பில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிராம மக்கள் நேற்று மேட்டுத்தெரு ஒன்றிய சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் கிளை செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி, பாலாஜி, கங்காதரன், வட்ட குழு உறுப்பினர்கள் கன்னியப்பன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்