குளச்சல் அருகே பலத்த மழை: வீடு இடிந்து மூதாட்டி பலி

குளச்சல் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து மூதாட்டி பலியானார்.

Update: 2019-10-31 23:00 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே பாட்டவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய மதலேனாள் (வயது 75). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருவதால் மரிய மதலேனாள் தனியாக வசித்து வந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், மஹா புயலாலும் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

இந்தநிலையில் மரிய மதலேனாள் இரவு வழக்கம் போல் தூங்க சென்றார். நள்ளிரவு பெய்த பலத்த மழையால் திடீரென பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து மரிய மதலேனாள் வீட்டின் சுவர் மீது விழுந்தது. மரிய மதலேனாள் வீடு மண்சுவரால் கட்டப்பட்டது என்பதால் முழுவதும் இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த மரிய மதலேனாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர். அதற்குள் மரிய மதலேனாள் பரிதாபமாக பலியானார். இதுபற்றி குளச்சல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான மரிய மதலேனாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்