மரக்காணம் அருகே, கடன் தொல்லையால் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை

மரக்காணம் அருகே கடன் தொல்லையால் தாயும், மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-11-01 22:45 GMT
மரக்காணம், 

மரக்காணம் அருகே உள்ள கீழ்பேட்டையைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி பாலையம்(வயது 55). இவருடைய மகன் ராஜேந்திரன் (36). இவருக்கு சகாயம் (30) என்ற மனைவியும், சாதனா (2) என்ற மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சகாயம் கணவரை பிரிந்து புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் ராஜேந்திரனும், அவருடைய தாய் பாலையமும் கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு சரியாக வேலை கிடைக்காததால் குடும்ப செலவுக்கு மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கினார்கள். ஆனால் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

அதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டனர். இதனால் கடன் தொல்லையால் மனஉளைச்சல் அடைந்த ராஜேந்திரனும், அவருடைய தாயும் கடன் தொல்லையால் வாழ்வதை விட சாகலாம் என முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சவுக்கு தோப்பு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மரக்காணம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தாய், மகன் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப்பின் இருவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் தாய் மற்றும் மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கீழ்பேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்