அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு உறவினர்கள் போராட்டம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-02 23:15 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 32). கொத்தனார். இவரது மனைவி சுவிதா(28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பிணியாக இருந்த கவிதாவுக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே குழந்தையை சுவிதா மற்றும் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் சுவிதா, குழந்தையை வீட்டுக்கு தூக்கி சென்றார்.

வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் குழந்தைக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக மீண்டும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

உறவினர்கள் போராட்டம்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து விட்டதாக கூறி சுவிதா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து சுவிதாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை வளாகத்தில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால்தான் குழந்தை இறந்தது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் போராட்டம்

தகவல் அறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

3 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்