ஏரியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலி

ஏரியூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-11-02 23:00 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் மித்ராஸ்ரீ (வயது 1½). இந்த குழந்தைக்கு கடந்த 4 நாட்களாக மர்ம காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு குழந்தை திடீரென இறந்தது.

ராமகொண்டஅள்ளி ஊராட்சி குண்டப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(34). இவர் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ராஜன் பரிதாபமாக இறந்தார்.

பொதுமக்கள் கோரிக்கை

ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை உள்பட 2 பேர் பலியானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏரியூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

மேலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்