ஈரோடு கட்டுமான நிறுவன அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோடு கட்டுமான நிறுவன அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2019-11-02 23:56 GMT
ஈரோடு,

பெருந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் அசோக்குமார். இவர் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ளது. இந்த நிறுவனம், சரக்கு மற்றும் சேவை வரியில் மோசடி செய்ததாக விசாகப்பட்டினத்தில் ஒரு புகார் பதிவானது. அதைத்தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள்.

மேலும், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை சுமார் ரூ.450 கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் விசாகப்பட்டினத்தில் சுப்பிரமணியம் அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோவை வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 2 கார்களில் வந்த 10 அதிகாரிகள் அலுவலகத்துக்குள் சென்று சோதனை பணிகளை தொடங்கினர். அலுவலகத்துக்குள் புதிய நபர்கள் வரவும், உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்லவும் வருமானவரித்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதேபோல் பெருந்துறையில் உள்ள சுப்பிரமணியம் அசோக்குமார் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2-வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. இதில் அனைத்து ஆவணங்களையும் எடுத்து அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? கணக்கில் வராத பணம், சொத்து உள்ளதா? என்று அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்