ஓமலூர் அருகே, டிப்ளமோ மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

ஓமலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-11-05 22:00 GMT
ஓமலூர், 

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கூ.குட்டப்பட்டி ஊராட்சி கலுங்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு குமரன் (21), குகன்(19) என்ற இரு மகன்கள் இருந்தனர்.

இதில் குகன் மேச்சேரியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்த டிப்ளமோ மாணவர், அதன்பிறகு பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை, பெற்றோர் கல்லூரிக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவர் குகன், கடந்த 1–ந் தேதி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் குகன் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்