‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ - சேலத்தில் கி.வீரமணி பேட்டி

‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ என்று சேலத்தில் கி.வீரமணி கூறினார்.

Update: 2019-11-05 23:00 GMT
சேலம்,

மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு சேலம் மண்டல திராவிடர் கழகம் சார்பில் நேற்று சேலம் தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் குணசேகரன், பெரியார் பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் தமிழ் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திராவிட இயக்கத்தை மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அது முடியாததால் திருவள்ளுவர் சிலையை அவமதித்து கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு உள்ளனர். ஆட்சியை பிடித்து விட்டோம் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. திருவள்ளுவரை யாராலும் அவமதிக்க முடியாது. திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. சிலை அவமதிப்பில் முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ கண்டித்து அறிக்கை விடவில்லை. பாரதீய ஜனதா கட்சியினர் நியாயப்படுத்தி பேசுகின்றனர்.

அண்ணாவின் அரசு என்று பெயர் வைத்து இருப்பவர்கள் திருவள்ளுவர் சிலை அவமதிப்பில் வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரையும், தமிழ் உணர்வாளர்களையும் கலவரத்தில் ஈடுபட வைத்து அதன் மூலம் திராவிட இயக்கத்தினரை அடக்கி விடும் திட்டமாக இருக்குமோ? என்ற அச்சம் இருக்கிறது. திருக்குறள் நூலை வெளியிட்டு, தமிழ் சிறந்த மொழி என்று கூறி வரும் பிரதமர் மோடியின் செயல் புதிய வித்தையாகும்.

விரைவில் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவர், பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கிளர்ச்சி தொடங்க உள்ளோம். தமிழகத்திற்கு 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் வர உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிகள் யாருக்கு பயன்படப்போகிறது?. தமிழ்ப்பிள்ளைகள் மருத்துவக்கல்லூரியில் படிக்க முடியாத நிலை உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. செல்வாக்கு உள்ள பிள்ளைகளின் ஆவணங்கள் காணாமல் போகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் கொடுக்க வேண்டும். கருணாநிதி கொண்டு வந்த செம்மொழி நிறுவனம் தற்போது தினக்கூலி நிறுவனமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமெரிக்காவில் பெரியார், கோபத்தை பொய்யாக்குங்கள் என்ற நூலை முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வெளியிட அதை சேலம் தமிழ்ச்சங்க தலைவர் சீனி.துரைசாமி பெற்றுக்கொண்டார். பின்னர் நூல் அறிமுகம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட செயலாளர் இளவழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்