‘நீட்’ பயிற்சி மையத்தில் முறைகேடு குறித்து 2 வாரத்தில் நடவடிக்கை ஐகோர்ட்டில் அரசு தகவல்

‘நீட்’ பயிற்சி மையத்தில் முறைகேடு குறித்து 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-11-05 22:30 GMT
மதுரை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பரசுராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘நீட் பயிற்சி வகுப்பு நடத்த தமிழக முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் கணினி உள்பட அனைத்து வசதிகளுக்கும் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலை பட்டம் பெற்ற 7 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிக்கை தயார் செய்து அங்குள்ள தலைமை ஆசிரியர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

மீண்டும் விசாரணை

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

2 வாரத்தில் நடவடிக்கை

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ’நீட் பயிற்சி மைய முறைகேடு புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘ என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்