திண்டுக்கல் அருகே, சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை

திண்டுக்கல் அருகே சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-11-06 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகேயுள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது 19). இவர் கடந்த ஆண்டு, 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பழனிக்கு கடத்தி சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமியை கற்பழித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் கோப்பெருந்தேவி ஆஜராகி வாதாடினார்.

இதற்கிடையே அந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சவுந்தரபாண்டிக்கு, சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கற்பழித்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அந்த தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்