ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை - கருவூலக்கணக்கு துறை ஆணையர் ஜவஹர் தகவல்

தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருவூலக்கணக்கு துறை ஆணையர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-08 22:30 GMT
அரியலூர்,

அரியலூரில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் செயலாக்க ஆயத்த கூட்டம் நடந்தது. இதற்கு அரசின் முதன்மை செயலாளரும், கருவூலக்கணக்கு துறை ஆணையருமான ஜவஹர் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கருவூலக்கணக்கு துறையின் ஆணையர் ஜவஹர் பேசியதாவது:-

தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு- செலவு குறித்த விபரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மிகத் துல்லியமாக நடத்த இயலும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 9 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.36 கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 498 சம்பளமாக கருவூலம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 238 ஓய்வூதியர்களுக்கு ரூ.4 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரத்து 858 ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ஒரேநாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்ப்பித்து, பயனாளியின் வங்கி கணக்கில் தொகை உடனடியாக வரவு வைக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் அரியலூர் மாவட்டத்தில் 9,942 பணிபதிவேடுகள் தொடர்பான பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்து, பின்னர் கணினிமயமாக்கப்பட்டு மின் பணிப்பதிவேடுகளாக்க பணிபுரிந்த அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் பாராட்டுதல்களையும், திட்டத்தினை மாவட்டத்தில் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் கலெக்டர் ரத்னாவையும் பாராட்டினார்.கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பாலாஜி, திருச்சி மண்டல இணை இயக்குனர் பழனிச்சாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், முதன்மை கணக்கு அலுவலர் (மின் ஆளுகை) இந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன், மற்றும் இதர மாவட்ட கருவூல அலுவலர்கள், உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்