வேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

வேதாரண்யம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-08 22:45 GMT
வேதாரண்யம்,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் சரக்கு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று பாத்திரங்களை விற்பனை செய்து வந்தார். அந்த சரக்கு ஆட்டோவை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் அந்த பெண், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமம் செட்டியார் குத்தகை பகுதியில் தங்கியிருந்து பாத்திரங்கள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த சிறுவன் குளிக்க வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தனது மகளை, குளத்தை காண்பிக்குமாறு சிறுவனுடன் அனுப்பி உள்ளார். குளத்துக்கு செல்லும் வழியில் சிறுமியை, சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் வேதாரண்யம் அரசு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயந்தி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்தனர்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்